பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்தது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துவதைத் தடுக்க அரசாங்கம் திட்டமிட்ட சதி என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த முக்கிய தகவல்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்க எதிர்க்கட்சி முயற்சித்தபோதும், அரசாங்கம் சபாநாயகர் மூலமாக அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக தெரிவித்தார். சட்டமா அதிபர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் அலுவலகத்தின் பரிந்துரைகள் கூட புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்ற நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி பெறுவதில் எந்த சிரமமும் இருக்காது. இருப்பினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய தகவல்கள் வெளிவருவதைத் தடுப்பதற்காகவே அதை நிராகரித்ததாக அவர் குற்றஞ்சாட்டினார்.
எதிர்காலத்தில் எந்த வழியிலாவது இத்தகவல்களை மக்களிடம் கொண்டுசெல்லும் பொறுப்பை எடுக்கத் தயாராக உள்ளோம் என்றும் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.
