ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், அவர் தலைமையிலான அரசும் மக்களின் விருப்பத்தை புறக்கணித்து செயல்படுகின்றன; அவர்களை மக்களின் ஆதரவுடன் விரைவில் வீட்டுக்கு அனுப்பிவைப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி மீண்டும் மலரும் என்பது உறுதி என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்அவர் மேலும் குறிப்பிட்டதாவது: ஜனாதிபதி அநுரவும் அவரது அரசும் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளனர். மக்களின் ஆணையை மீறி முறையற்ற முடிவுகளை எடுத்து வருகின்றனர். அரசின் அநியாய தீர்மானங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் மக்களை போலீசாரின் மூலம் அடக்க முயற்சிக்கின்றனர்.
மேலும், முன்னாள் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போலியான குற்றச்சாட்டுகளை உருவாக்கி, பழிவாங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய அரசை மக்களின் சக்தியால் விரைவில் வீழ்த்துவோம்; மொட்டுக் கட்சியின் ஆட்சி மீண்டும் உறுதியாக நிலைபெறும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
