கனடாவின் டொரண்டோ நகர ரொண்டோ மாநகராட்சியின் ஸ்கார்பரோ ரக் ரிவர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈழத் தமிழரான நீதன் சண்முகராஜா (நீதன் ஷான்) வெற்றிபெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
37 வாக்குச்சாவடிகளில் 36 சாவடிகளின் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், நீதன் சண்முகராஜா 5,174 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்ட அனு சிறிஸ்கந்தராஜா 3,374 வாக்குகள் பெற்றுள்ளார்.
முன்னாள் உறுப்பினர் ஜெனிபர் மெக்கெல்வி Ajax நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றதால் காலியாகியிருந்த அந்த இடத்தை இப்போது நீதன் நிரப்பவுள்ளார். “நன்றி ஸ்கார்பரோ-ரக் பார்க். இது நீண்ட, சோர்வான, ஆனால் உற்சாகம் தரும் பிரசாரம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் எங்களுடன் உழைத்தனர்” என்று தனது வெற்றிக்குப் பின் நீதன் தெரிவித்துள்ளார்.
வாக்குச்சின்னங்கள் அகற்றப்பட்டபோதும், தொண்டர்கள் மீண்டும் அவற்றை அமைத்த சம்பவத்தை நினைவுகூர்ந்த அவர், “என் அணியின்மீது பெருமை கொள்கிறேன். பல தலைமுறைகள் இணைந்த உழைப்பின் பலன் இந்த வெற்றி” என்று பாராட்டினார்.
மேடையில் அவருடன் அவரது மனைவியும் இரு மகன்களும் இணைந்தனர். “போட்டி என்பது வெற்றிக்காக மட்டும் அல்ல; கருத்துக்களைப் பகிர்வதற்கும். ஸ்கார்பரோ இனி புறக்கணிக்கப்படாது. எங்கள் குரல் நகரசபையில் ஒலிக்கும். ஸ்கார்பரோவின் ஆறு பகுதிகளின் மக்களுக்காக நான் உறுதியாக நிற்பேன்” என்று அவர் வாக்குறுதி அளித்தார்.
நீதன் 2026 அக்டோபர் மாதம் வரையிலான காலத்திற்கு நகராட்சி மன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பார். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 46 வயதான அவர், டொரண்டோ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
